The Blog

நூலைப் படி – சங்கத்தமிழ்
நூலைப்படி – முறைப்படி
நூலைப்படி
உடனெடுப்பு:
காலையில் படி – கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் படி )
அடிகள்:
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வ தெப்படி ? ( நூலைப்படி)
அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
இறந்த தமிழ்நான் மறை
பிறந்த தென்று சொல்லும்படி (நூலைப்படி)
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப் புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி (நூலைப்படி)
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக் கெல்லாம் தள்ளுபடி!
சேதி அப்படி! தெரிந்து படி
தீமை வந்திடு மேமறுபடி (நூலைப்படி)
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவதெப்படி?
(நூலைப்படி)
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்காஇன் பம்மறுபடி
ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி (நூலைப்படி)
தகவல்:
30.12.1958 குயில் ஏட்டில் பாரதிதாசன் எழுதிய கவிதை
இசை: யதுகுலகாம்போதி தாளம்: ஆதி